Monday, November 16, 2009

பத்து தலைக்குள் புதைந்திருக்கும் ராஜவம்சத்து ரகசியம்


ஜானுவிற்க்கு ஸ்ரீராமின் மறைவு கொஞ்சம் நிம்மதியை தந்தது,
தேசத்திற்கே தலைவனாக இருந்தாலும் குடும்பத்தலைவனாக அவன் சராசரி மனிதனாகவே நடந்து கொண்டான்.

நிறைய கேள்விகளும்,சந்தேகங்களும் ஜானுவை நோக்கி அவனிடம் இருந்து கொண்டே இருந்தது. நிரூபிக்க முடியாமல் ஜானுவிடம் பொருமிக்கொண்டே இருந்தான் இறுதிவரை.
இரட்டை பிள்ளைகள் அழகாய் பிறந்ததும் அவனது வசை சொற்களும்,கண்ணீர் பீறிட்ட கோபமும் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே சென்றது.

டி.என்.ஏ சோதனை வரை ஜானுவை உட்படுத்த தயாராய் இருந்தான்,
முக்கிய மந்திரி ஆஞ்சநேயர் “இது பிரதம குடும்ப பிரச்சினை, நாளை வெளியில் தெரிந்தால் எதிர் கட்சியினரின் வெறும் வாயில் அவுளைத் திணித்த கதையாகிவிடும்..எனவே வேண்டாம் வீனாக ஜானகி அம்மாவை சந்தேகப்படாதீர்கள்” என சொல்லி சமாதான படுத்தி சோதனையை தடுத்தார்.

தங்களது சண்டையால் பிள்ளைகளின் எதிர்காலம் பாதிக்க கூடாது,முக்கியமாக தந்தை மீது அவர்களுக்கு வெறுப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காக, லவனையும் குசானையும் படிப்பை காரணம்காட்டி சிறு வயதிலேயே வெளிநாட்டிற்க்கு அனுப்பி வைத்தாள் ஜானு.

தங்கள் குடும்ப பிரச்சனைகள் எதுவும் தெரியாமல் ராஜகுடும்பத்து வாரிசுகள் சுகமாய் சுதந்திரமாய் படித்து வளர்ந்தனர்.ஜானு மட்டும் அவ்வபோது சென்று பார்த்து வந்தாள்.ஸ்ரீராமை பற்றி விசாரித்தால் “உங்கள் அப்பா தேசத்தின் தலைவன் அல்லவா.. ஆகவே நேரம் இல்லை அவருக்கு, விரைவில் வந்து உங்களை பார்ப்பார்”எனக் கூறி சமாளித்து வந்தாள் ஜானு.

பிள்ளைகள் வளர வளர தந்தையின் பாராமுகம் பற்றிய கேள்விகள் ஜானுவிற்க்கு மிகுந்த சிரமத்தை கொடுத்தது.அந்நாட்கள் அவளுக்கு அக்னி கங்குகளை கடப்பது போன்று இருந்தது.

பொறுமையிழந்து லவனும் குசானும் ஒரு நாள் நேராக புறப்பட்டு வந்து வீட்டில் நின்றார்கள்.
மகிழ்ச்சியாய் தந்தை வரவேற்ப்பார், நாம்.. ஏன் இவ்வளவு நாள் எங்களை பார்க்க வரவில்லை என செல்லமாக கோவித்து உரையாடலாம் என நினைத்தவர்களுக்கு ஸ்ரீராமின் செயல் இடியாய் இறங்கியது.

தன் முன் நின்றவர்களை நன்றாக உற்றுப்பார்த்தான் ஸ்ரீராம்,கண் காது மூக்கு என தனித்தனியாக கவனமாக பார்த்தான்,
முகம் கடுமையாக மாறிக்கொண்டே இருந்தது,முகம் சிவந்து ,கண்ணீர் பெருகி, பற்களை கடித்து..
“இல்லை..இல்லை..”என கலங்கிபோய் கத்தினான்,செய்வதறியாது திகைத்து நின்ற ஜானுவைப் பார்த்து “இன்னுமா..என்னை நம்ப சொல்கிறாய்.. சண்டாளி..” என கதறியவாறு ஓடிச்சென்று தன் அறைக்குள் தாளிட்டுக் கொண்டான்.

லவனும் குசானும் ஒன்றும் புரியாமல் ஒருவர் முகத்தை ஒருவர் மாறி மாறி பார்த்துக் கொண்டனர்.முக்கிய மந்திரி ஆஞ்சனேயர் ஸ்ரீராமின் பின் சென்று சில நிமிடங்கள் கதவினை தட்டிப் பார்த்து திறக்காததால் விட்டு விட்டார்.

நாட்டில் உள்ள பிரச்சினைகளின் அழுத்தம் தாங்காமல் ஸ்ரீராமிர்க்கு ஒரு வித மன நோய் பீடித்திருக்கிறது, இது வெளியில் யாருக்கும் தெரியாது என அமைச்சர் ஆஞ்சனேயனும்,ஜானுவும் பிள்ளைகளிடம் சொல்லி சமாளித்தனர்.

லவனும் குசானும் தன் தந்தையின் நோய் பற்றியும், அதற்கான தீர்வு பற்றியும் தீவிரமாக கணினி வலையில் தேட ஆரம்பித்தார்கள்.

ஸ்ரீராம் பூட்டிய அறையை திறப்பதாய் இல்லை,இரண்டு நாட்களாயிற்று ,மந்திரி ஆஞ்சனேயர் கட்சியினரை ஏதேதொ சொல்லி சமாளிக்க வேண்டியதாயிற்று. பிள்ளைகளோடு ஓய்வாக இருக்கிறார்,உடம்பு சரியில்லை ஜுரம் என்று.


மூன்றாவது நாள் ஸ்ரீராமின் அறையில் துற்நாற்றம் வீசவே கதவினை உடைத்து ஆஞ்சனேயர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.ஸ்ரீராம் உத்திரதில் தொங்கி கொண்டு இருந்தான்.
ஜானுவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாமல் அவனை கீழிறக்கி, “மாரடைப்பில் பிரதமமந்திரி இறந்தார்” என்ற செய்தியை உலகிற்கு அறிவித்தார் அமைச்சர்.

ஊடகங்கள் மூச்சுவிட கூட நேரம் விடாமல் செய்தியை ஒளிபரப்பிக்கொண்டிருந்தன.உலகத் தலைவர்கள் இரங்கல் செய்திகளை தெரிவித்தனர்.எதிர்கட்சியினர் கூட “ நாடு ஒரு ஈடில்லா நல்ல மனிதனை இழந்துவிட்டது”என புளுகினார்கள்.

ஊடங்கள் அனைத்தும் வயலின் வாசித்தபடி இறுதி ஊர்வலத்தை நடத்தின.இளைய மகன் குசான் தீ மூட்டி இறுதி சடங்கு செய்ய,அதுவரை ஜானுவின் மனதில் அனலைக் கக்கி கொண்டிருந்த ஜூவாலை மெல்ல தணிந்தது.

எதிர் பார்த்தபடி ஆஞ்சனேயர் பிரதமராக பொறுப்பேற்று பொறுப்பாக கட்சியை பார்த்துக் கொண்டார்.ஜானு கட்சி தலைவியாக தலைமையை நிர்வகித்தாள்.சில நாட்கள் ஜானுவுடன் இருந்த லவனும் குசானும் விடைபெற்று படிப்பை தொடர வெளிநாடு சென்றனர்.

ஜானுவிற்க்கு ஸ்ரீராமின் மறைவு சற்று நிம்மதியை தந்தது.

வருடங்கள் கடந்து லவனும் குசானும் வாலிப வயதை அடந்தனர்.அவ்வயதிற்கான சந்தோஷங்கள் தந்தையை மறக்க செய்திருந்தது.

லசேனா எனும் பேரழகி லவனுக்கு கிடைத்திருந்தாள்,காதல் வளர்த்து கசிந்துருகி கொண்டிருந்தனர் இருவரும்.அவள் எந்த விதத்திலும் இவர்கட்கு தகுதியில் குறைந்தவள் இல்லை.

ஆனால் அவர்களது காதல் இணைவது அவ்வளவு எளிதான ஒன்று அல்ல.அது இரண்டு தலைமுறை பகை.இரண்டு நாட்டின் பகை,இரண்டு வம்சத்தின் வன்மம் என நிறைய சிக்கலை கொண்டதாகும்.

அவள் அண்டைய நாட்டின் முன்னால் அதிபர் ராவனின் மூன்றாவது மனைவியின் மகள்.
இரு நாட்டிற்கிடயே சில வருடங்களுக்கு முன் நடந்த போரில், ராவன் மற்றும் அவனது ஆண் வாரிசுகள் அனைவரும் கொல்லப்பட்டனர் ஸ்ரீராமின் கட்டளையின் பேரில்.ஆகவே இவர்களது காதல் இரு நாட்டின் பிரச்சனை.

இருப்பினும் காதல் அவர்களை கண்மூடித்தனமாக நம்ப வைத்தது,பிரச்சனைகளை தீர்த்துவிடலாமென.குசானும் அவர்களுக்கு தைரியம் சொன்னான் தான் அம்மாவிடம் பேசுவதாக.

தாமதிக்காமல் இருவரும் புறப்பட்டு வந்து ஜானுவிடம் பேசினார்கள்.மகன் காதல் வயப்பட்டுள்ளான் என்ற ஆரம்பசெய்தி அவளுக்கு புன்முறுவலோடு மகிழ்ச்சியை தந்தது.
லசேனா பற்றி குசான் கூற ஆரம்பித்தான் “அம்மா அவளும் ஒரு நாட்டின் பிரதம குடும்பத்தை சேர்ந்தவள்தான், அழகிலும் அண்ணனுக்கு இணையானவள்”.என மறைமுகமாக சொல்லிக்கொண்டே இருந்தான்.

“எதிலும் குறைந்தவளில்லை எனக் கூறிவிட்டாய் பிறகென்ன ..எந்த நாட்டை சேர்ந்தவள் ..யாருடைய பெண் என்று சொல், ஆஞ்சனேய மாமாவை பேசச்சொல்வோம்” என ஜானு குசானிடம் கேட்டாள்.
குசான் சற்று தயங்கி “ நம் அண்டை நாட்டின் முன்னால் அதிபர் ராவனின் மகள் அம்மா.. லசேனா” எனக் கூற,ஜானு அதிர்ந்து எழுந்தாள்.
“என்ன சொல்கிறாய் நீ.. இது எப்படி சரி வரும் என்று பேசுகிறாய்.. நடந்தவையெல்லாம் தெரியும் அல்லவா உனக்கும் ,உன் அண்னனுக்கும்.அவளுக்கும் இது தெரிந்திருக்குமே.சிறுபிள்ளைகள் என்பது சரியாகத்தான் இருக்கிறது.இது ஒரு போதும் நடக்காது.இவ்விசயத்தை மறந்து விடுங்கள்.”எனக் கூறி சட்டென எழுந்து சென்றாள்.ஏதோ பதில் கூற முற்பட்டவன் முடியாமல் நின்றான்.

லவனுக்கு சோகம் அப்பியது, நிலைகுழைந்து கண்கள் நிலை குத்தி அறைக்குள் அடைந்தான்.குசான் அண்ணனின் காதலையும் அம்மாவின் பதிலையும் பிரதம மந்திரி ஆஞ்சனேயரிம் கூறி உதவும்மாறு வேண்டினான். நீண்ட நேர சிந்தனைக்கு பின் ஆஞ்சனேயர் ஜானுவிடம் பேச வந்தார்.

ஜானு “ என்ன பேசுகிறீர்கள் அண்ணா நீங்களுமா..?”என கடுமையாக மறுத்தாள்.
ஆஞ்சனேயர் “ ஜானகி அம்மா.., நன்றாக யோசித்துப் பாருங்கள்.,இது நமக்கு ஒரு வாய்ப்பு.இரு நாடுகளுகிடயே இருக்கும் பனி போரை தனிக்கலாம்,ஸ்ரீராம் அய்யா தொடுத்த போருக்கு ஐ.நா.வின் குற்றவாளி கூண்டில் நாம் இன்னும் பதில் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.சற்று நேரம் சிந்தியுங்கள் அனைத்து பிரச்சினைக்கும் இது ஒரு தீர்வு. நாம் போரில் செய்த பாவத்திற்கு பிராயசித்தம்.”
ஜானு முறைத்தவாறு “ நன்கு தேறிய அரசியல்வாதி ஆகிவிட்டீர்கள் அண்ணா..இதுபற்றி இனி மேல் என்னிடம் பேசாதீர்கள்.. வெளியே போங்கள் இங்கிருந்து..” என திருத்தமாக கூறினாள், வேறுவழியின்றி ஆஞ்சனேயர் வெளியேறினார்,வாசலில் காத்து கொண்டிருந்த லவனிடமும் குசானிடமும் உதட்டை பிதுக்கி இயலாமையை சொல்லிவிட்டு நகர்ந்தார்.

லவனுக்கு மனதிற்குள் காதல் பிசைந்தது, லசேராவின் ‘என்ன ஆயிற்று” “அம்மா சம்மதித்துவிட்டார்களா” போன்ற குறுஞ்செய்திகளுக்கும் மின் அஞ்சல்களுக்கும் பதில் தெரியாது தலையை பிய்த்து கொண்டான்.ஜானுவின் மேல் கோபம் பீறிட்டு வந்தது.அறைக்கு சென்று கட கடவென நான்கு “பீர்” புட்டிகளை காலி செய்தான்.அழுகை திமிரிக்கொண்டு வந்தது.போதையோடு ,தன் அம்மாவின் அறைக்கு நேரே சென்றான்.

ஜானுவை நேருக்கு நேர் கை நீட்டி போதையில் குழறிய நாக்கிலிருந்து வார்த்தைகளை கொட்டினான் “ நீயெல்லாம் ஒரு தாயா..பிள்ளையோட மனச புரிஞ்சுக்க தெரியல.. சீ.. ராஜ வம்சமா.. மரியாதையாம்..யாருக்கு வேணும் இதெல்லாம்.. போட்டி,பகைனு கடைசில என்ன கொண்டு போகப்போறீங்க..எல்லோரும் சாகப்போறோம்..எல்லோரும் சாகப்போறோம்..”என வாயில் வந்த தத்துவங்களையெல்லாம் வாந்தி எடுத்துவிட்டு மயங்கி விழுந்தான்.

அமைதியாக பார்த்துக் கொண்டிருந்த ஜானு வெடித்து அழ ஆரம்பித்தாள்.வாழ்க்கையில் அவள் அழுவது இதுவே முதல்முறை,ஆனால் வாழ்க்கையின் மொத்தத்திற்கும் அழுகை அடங்க மறுத்து மனதினை பிளந்து கொண்டு வந்தது.மயங்கி கிடக்கும் லவனை உற்றுப் பார்த்து “மன்னித்துவிடு மகனே ..”என வார்த்தையை உதிர்த்தாள்.

மேஜையை திறந்து காகிதத்தை எடுத்து லவனுக்கு எழுதினாள்.
“மகனே லவன்.., எனக்கு உன் வேதனை புரிகிறது,ஒரு தாயாக நான் துடித்து கொண்டுதான் இருக்கிறேன்.ஆனால் என் மறுப்புக்கு காரணம் நான் யாரிடமும் கூற முடியாது,இதுவரை யாரிடமும் சொல்லாத ஒரு பெரும் ரகசியம் இருக்கிறது.இதனை இதுவரை நான் ரகசியமாக வைத்திருந்ததால்தான் நான் உயிரோடு இருந்தேன்.ஆனால் இனியும் ரகசியம் காக்க முடியும் என்ற நம்பிக்கையில்லை.பல ஆண்டுகளுக்கு முன் உன் அப்பா ஸ்ரீராம் அண்டை நாட்டோடு போரிட்டு அழித்தாரே ,அதன் உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா உனக்கு.உலகத்திற்க்கு வேண்டுமானால் அது மக்களுக்கான போர்,மண்ணை காக்க புரிந்த போர் என இருக்கலாம்.ஆனால் உண்மை அதுவல்ல.

போர் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன் நான் அந்த நாட்டிற்க்கு அரசியல் விருந்தினராக சென்றிருந்தேன்,அந்நாட்டின் அதிபர் ராவன் சிறப்பாக உபசரித்து விருந்தோம்பல் செய்தார்,அங்கிருந்த இரண்டு நாட்களில்,ராவன் பற்றி நிறைய தெரிய வந்தது.அவர் ஒரு மிகப்பெரிய வீரன்,ஆளுமையில் சிறந்தவன்,புத்தி கூர்மையுடன் ஆட்சி புரிபவன்.அன்பினை மழையாய் மக்களுக்கு பொழிபவன் என அவனை பற்றிய சிறப்புகள் யாரும் சொல்லாமலேயே எனக்கு புரிந்து ஈர்த்தது.அவன் ஒருவன் பத்து பேருக்கு சமமானவன் , திறமையும் தன்மையும் அவனிடம் நிறையவே இருந்தது.பல பெண்களின் கனவு நாயகனாக இருந்தான்,அப்பெண்களில் நானும் ஒருத்தியாய் என்னை அறியாமல் மாறிப்போனேன். ‘பத்து தலை தலைவன்” என்ற பெயருக்கு அவன் சரியாக பொருந்தினான்.அவன் சிறந்த இசை ஞானம் உடையவன்.எனக்கும் இசை என்றால் சிறு வயதிலிருந்தே உயிர்.
ஆனால் திருமணத்திற்க்கு பின்னால் என் இசை ஆர்வம் முடக்கப்பட்டு கிடந்தேன்.அவன் வீணை மீட்டும் அழகில் நான் சொக்கிப்போய் ஒருவித ஈர்ப்பு கொண்டேன், இரண்டு நாட்கள் விருந்தினராய் சென்றவள் எனக்கே தேரியாமல் சில நாட்கள் கிரங்கி அங்கேயே தங்கிவிட்டேன்.அவன் மீட்டும் வீணையின் நரம்பு,எனக்குள் அதிர்ந்து சுகமான ராகத்தையும் இன்பத்தையும் கொடுத்தது.

நான் திரும்பாததால் ஆத்திரம் அடைந்த என் கணவர், அங்கு நேராக வந்து கத்தியதும்தான் எனக்கு கிரக்கம் கலைந்தது.அன்று என்னை நோக்கி வசை சொற்களை வீசியவர் கடைசிவரை நிறுத்தவில்லை.என் சுயநினைவை இழந்து நான் இருந்ததுதான் வாழ்க்கையில் நான் செய்த பெருங்குற்றம்.என் மீதுள்ள கோபம் என் கணவரை அந்நாட்டின் மீது ஏதோ அரசியல் காரணங்கள் கூறி அழிக்க வைத்தது.

இதுவரை எனக்குள் புதைந்திருந்த இந்த ரகசியத்தின் காரணமாகவே என்னால் உன் காதலை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

ஏனென்றால் உன் உன்மையான பெயர் “லவன் ஸ்ரீராம்” இல்லை மகனே “லவன் ராவன்” என்பதாகும்.

எழுதி முடித்து பேனாவின் முனையை முற்றுப்புள்ளியாய் பதித்திருந்தாள்.தூக்க மாத்திரை புட்டி காகிதத்தை பறக்காமல் பாதுகாக்க.,ஜானு அசையா உருவமாக சாய்ந்தாள்.

காலையில் போதை தெளிந்து கண்விழித்த லவன் கடிதத்தை வாசித்தான்
கடித வார்த்தைகளுக்கு இடையில் ஸ்ரீராமின் கடைசி வார்த்தைகள் அவனுக்கு கேட்டது
“இல்லை..இல்லை..”
“இன்னுமா..என்னை நம்ப சொல்கிறாய்.. சண்டாளி..” என ஸ்ரீராமின் குரல் கதறியது.
கலங்கிய கண்களுடனும் கனத்த நெஞ்சத்துடனும் கடிதத்தைப் படித்தவன், கண்ணாடி முன் சென்று பார்த்தான்,

கண்ணாடி பிம்பத்தில் பத்து தலைகள் தெரிந்தது.

Sunday, November 8, 2009

இசை எனும் இன்ப வெள்ளம் சிலசமயம் மூழ்கடித்து கொல்லும்..



எச்சரிக்கை – இதைப் படிக்கும்போதோ இல்லை இந்த பாடலை கேட்கும் போதோ உங்களுக்கு தற்கொலை எண்ணம் தலை தூக்கினால் அதற்கு இளையராஜாவோ,ஜானகியோ இல்லை நானோ பொறுப்பல்ல.


“காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே...

ஜானகியின் மயக்கும் அனஸ்தீஸ்ய குரல் இசையோடு இளகி அந்த அறையின் ஆக்சிஜனாய் பரவி இருந்தது

உயர்ந்த அடுக்குமாடி கட்டிடத்தின் பதினெட்டாவது மாடியில் மிருதுவோடு ஜானகியும், இளையராஜாவும் கலந்திருந்தார்கள்..,

மிருதுவும் கீதத்தில் இணைந்து உருகிக்கொண்டிருந்தாள்..

அலை போல நினைவாக.. சில்லென்று வீசும் மாலை நேர...,

அவளது உதடு அப்பாடலுக்கு தன்னிச்சயாக அசைந்து கொடுக்கும் அடிமையாய் முனுமுனுத்தது.

நீ எப்போதாவது தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறாயா

கண்ணாடி முன் நின்று வினாவினாள் மிருது..

இல்லை ஆனால் தற்கொலையை பார்த்திருக்கிறேன் கண்ணாடிக்குள்ளிருந்து பதில் சொல்லிக்கொண்டாள்..


காற்றில் எந்தன் கீதம்
காணாத ஒன்றைத் தேடுதே...


ராஜாவின் இசை வருடிக்கொண்டிருக்கிறது மனதை.., அந்த மிதமான சுகம் அவளை ஒரு முடிவிற்கு தள்ளிக்கொண்டிருந்தது

இசையின் மேல் இருந்த காதலுக்கு நிகராக மிருது தன் அழகின் மேலும் காதல் கொண்டவள் மிருது

அங்கங்களை மேலிருந்து கீழ்வரை..,

ஒரு இறகு கிணத்திற்குள் விழுவது போல் மெதுவாக பார்த்தாள்


நான் தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்


பின்பக்கம் திரும்பி தன் பின் அழகையும் பிட்டம் வரை அடங்காமல் விழுந்து கொண்டிருக்கும் கூந்தலையும் கண்ணாடியில் ரசனையோடு ரசித்தாள்..,

கண்ணாடிக்குள் பயந்து அதிர்ந்தாள் உடல் கிடுகிடுத்து ஆடியது

எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
என் உள்ள வீணை ஒரு ராகம் தேட..,

இன்னிசை குரலுக்கு வீணை ராகம் தேடி கொடுத்துக் கொண்டிருந்தது

தன்னை தானே அழித்துகொள்ள உலகின் மொத்த தைரியமும் வேண்டும்

என்னிடம் இல்லை விட்டுவிடு என்னை, கண்ணாடி பிம்பம் வேண்டி உருகி கெஞ்சியது

என்னவென்று தெரியவில்லை நீ மறுப்பதால்தான் நான் தாமதிக்கிறேன்

ஏன் பயப்படுகிறாய் கண்ணாடி பெண்ணே.? மிருதுவின் ஏளனம் அவள் தீர்க்கமான முடிவை நோக்கி இருக்கிறாள் என்பதை கண்ணாடிக்கு உணர்த்தியது.

அன்புள்ள நெஞ்சம் காணாதோ ஆனந்த ராகம் பாடாதோ
கண்கள் ஏங்கும்
நெஞ்சின் தாபம் ஏயும் ஏற்றும்..,

கலங்கும் கண்கள்,தவிக்கும் நெஞ்சமுமாய் கண்ணாடி பிம்பத்திலிருந்த மிருது..

நான் முன்னர் பார்த்த தற்கொலைதான் காரணம்,அழகு பதுமையான அந்த அக்கா தூக்கில் தொங்கியதும் அருவெருப்பான உருவமாகிப்போனாள்,கண்கள் பிதுங்கி தொங்கி, நாக்கு வெளியே தள்ளி,கயிற்று சுருக்கின் மூர்க்கம் தாங்காமல் கடித்த அடி நாக்கின் வழியே ரத்தம் கசிந்து,கழுத்து வீங்கி புடைத்து,இருபுறமும் தடித்து கயிறை மறைதிருந்த அந்த காட்சி இன்னும் என்னை விட்டு போகவில்லை, நானும் ஒருபோதும் அதைப்போல் அசிங்கமான நிலையை அடைய சம்மதிக்க மாட்டேன்.

காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே..

ம்..ம்.. என்றவாறு.,மறுபடியும் தன் அங்கங்களைப் பார்த்தாள்,உடைகளை தகர்த்த அவளது பார்வை முழு நிர்வாணமாய் பார்த்தது.உன்மையிலேயே அழகின் உச்சம்தான் அவள், மகிழ்சியாய் ரசித்து கொண்டாள்.

நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்..,

ஜானகியின் குரல் குழைந்து மிருதுவை சூழ்ந்தது.

ஓயாத நெஞ்சம் சமாதானம் அடையாமல் நிலையில்லாமல் யோசித்தது

சரிதான் ஆனால் இறந்தபிறகு ஒன்றும் தெரியாதே, யார் நம் உருவத்தை பார்த்து என்ன கூறினால் என்ன,அனைதிலிருந்தும் விடுதலை,சமுதாயம், ,அசிங்கம்,அவமானம் அனைத்திலிருந்தும் விடுதலை.துரோகத்தின் உச்சவலியிருந்து விடுதலை. அதுவொரு சுகமான அனுபவம் இசையை கேட்பதுபோல, உலகம் மறந்த இசை,உலகம் மறந்த மரணம். உலகம் துறந்த இசை,உலகம் துறந்த மரணம்.

கத்ரிக்கோல் சுருண்ட கேசத்திற்குள் மெல்ல நுழைந்து அவனைப் போன்றே மெல்ல இதமாய் வருடியது

நீ அவ்வளவு அழகு என்றாள் அவன் ஏன் நிராகரித்தான்,துச்சமென வீசியெறிந்து சென்றுவிட்டானே,அதுமட்டுமல்ல உன் அழகை உலக வெளிச்சத்தில் வெளியிடுவேன் என வேறு மிரட்டுகிறானே..,

அவனோடு காதல் நிரம்பிய காமத்தில் திலைத்திருந்தபோது அவன் படம் எடுப்பதை தடுத்திருந்தால் இந்த முடிவுக்கு வந்திருக்க மாட்டாய்..,கண்ணாடி பாதரசம் கசிந்து கதறியது

கத்திரி அவனாய் மாறி அவளது கேசத்தை துண்டு துண்டாக்கியது, சுருண்ட முடிகத்துக்கள் சுருண்டவாரே தரையில் விழுந்தது

அவன் மீது கொண்ட காதல் அவனை ஒருபோதும் என்னிடம் இருந்து பெறுவதை தடுக்காது..அவனை படம்பிடிக்க அனுமதித்தது என் உடலை அல்ல.., நான் அவன் மீது கொண்ட நம்பிக்கையை. அதிர்ஷ்டமில்லாத முட்டாள் அவன், என் அன்பினை பெற தகுதியற்றவன் ஆகிவிட்டான்.என் அழகினைவிட என் அன்பு பேரழகானது என்பதை உணராமல் சென்றுவிட்டான்.உடல் என்ன..என்னிடமிருந்து அவன் பெற்றுக்கொள்ளட்டும் என் உயிரையும் சேர்த்து..

சாவதற்கு முன்பே அலங்கோலமானாள் மிருது..,

கன்னதில் அழகான ஓவியம் போல் கத்ரி பதித்து கீரினாள்,கத்ரி நகர நகர ரத்தக் கோடு தொடர்ந்தது

ஜானகியின் குரல் மட்டும் அவளின் உதட்டிலிருந்து பிரியாமல் இன்னும் இசைத்தது

மௌனத்தின் ராகம் கேளாதோ, மௌனத்தில் தாளம் போடாதோ
வாழும் காலம் யாவும் இங்கே நெஞ்சம் தேடும்

காற்றில் எந்தன் கீதம்

இசைஞானியின் வயலின் நரம்பில் ஏறி முறுக்கேற்றின,சுண்டி இழுக்கும் நரம்புக்கம்பி அதிர்வோடு மூளையை ஆக்கிரமித்து.,இறுக்க..

மெல்ல நடந்தாள் துரோகங்கள் மற்றும் ஏமாற்றங்களால் செய்யப்பட்ட சிறகினை கொண்ட மிருது எனும் தேவதை

நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்
நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்..,

நிற்காத மனம் முடிவின் மீது நிலை கொண்டது

ஒரு ரெக்கையில் வயலினும் மறுரெக்கையில் மீட்டும் கம்பியும் தாங்கி கொண்டு,மொட்டை மாடியின் தடுப்பு சுவற்றில் தன் பலிங்கு பாதம் பதித்து ஏறி நின்றாள்..,இசையோடு தலையை அசைத்தவாறு கீழ் நோக்கி பயணித்தாள் தன் அழகோடு,அவளது ஆன்மா பாடலோடு எதிர்திசையில் வெளியெங்கும் பரவியது காதலோடு...

“காற்றில் எந்தன் கீதம் காணாத ஒன்றைத் தேடுதே...

காற்றில் எங்காவது இந்த கீதம் ஒலித்தால் நன்றாக கவனித்து பாருங்கள் அது ஜானகியின் குரலைப் போன்ற மிருதுவின் குரலாகத்தான் இருக்கும்.,

காணாத ஒன்றை தேடிக்கொண்டிருக்கும் ஒரு தேவதையின் குரல் அது.



Friday, November 6, 2009

எதிர்காலத்தில் பல கோடிகளுக்கு ஏலம் போகப்போகும் காதல் கடிதம்



முன்குறிப்பு – இக்கதையில்(கடிதத்தில்) வரும் பெயர்களும், சம்பவங்களும் யாரையும் குறிப்பிடுவன அல்ல,முற்றிலும் கற்பனையே (இப்படி சொன்னா நம்பவா போறீங்க).

முன்னுக்கு பின் முரணான குறிப்பு – சம்பந்தபட்ட நபர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவர்கள் பெயர்,ஊர், நாடு, மொழி ஆகியவை மாற்றப்பட்டுள்ளது.

டுமிழ் சினிமாவின் நம்பர் மூனு நாயகி ( நம்பர்களில் தனக்கு நம்பிக்கை இல்லை என பல முறை கூறிவிட்டார் ,இருந்தாலும் அவர்தான் நம்பர் ஒன் ஏனென்றால் அவரது போட்டி நடிகை நயன்னாக இருப்பதால்,இப்போதைக்கு மூனு தான் நம்பர் ஒன்)
கெலுங்கு சினிமாவின் நாயகர்கள், நடிகர்கள், ரசிகர்கள்,சிறுவர்கள்,வயோதிகர்கள்,அரவாணிகள் என பாரபட்சமே இல்லாமல் தன் கவர்சியான அங்க அசைவால் அனைவரது தூக்கத்தையும் கெடுத்தவரும்மான, நினைதாலே சில்லிட செய்யும் நாயகி ஷிரிஷா லேட்டஸ்டாக எழுதிய காதல் கடிதம்,யாருக்கு எழுதியிருக்கிறார் என்பதை படித்து அறிந்து,தெரிந்து,புரிந்துகொள்ளுங்கள் முடிந்தால்.

சென்னை
தேதி : காதலுக்கு உகந்த தேதி

எனதருமை புகாமாவிற்கு, உங்கள் “டிரீம் கேள், கிளாமரஸ் பியூட்டி” ஷிரிஷா எழுதுவது.பேரிக்கா நாட்டின் அதிபராக இருக்கும் உங்களுக்கு ஆங்கிலத்தில் எழுதாமல் தமிழில் கடிதம் எழுதுவதற்க்கு மன்னிப்பு கேட்கமாட்டேன்.,ஏனென்றால் காதலர்களுக்கு பிடிக்காத ஒரே வார்த்தை “மன்னிப்பு” என்று எங்கள் இளம் நாயகன் கூறி இருக்கிறார்.சரி அதை விடுங்கள் நான் ஏன் தமிழில் எழுதுகிறேன் என்றால் எனக்கு ஆங்கிலமே அரைகுறையாய்த்தான் தெரியும்,இங்கு எவர்க்கும் அது கூட தெரியாததால் நான் பெரிய ஆங்கில புலமை வாய்ந்தவள் என புரளியை கிளப்பிவிட்டார்கள் நானும் அப்படியே அது “கெவுரதையா” இருக்கட்டுமேனு மெயிண்டெய்ன் பண்ணிக்கிட்டேன்.மனம் கவர்ந்தவரிடம் எதையும் மறைக்க கூடாது என்பதற்காக இதுவரை கட்டிக்காத்து வந்த ரகசியத்தை சொல்லிவிட்டேன் என் மணவாளா.

பேரிக்க நாட்டின் சிம்மாசனத்தில் நீ ஏறுவதற்க்கு முன்பே நீ என் மனதில் குடியேறி சப்பணங்கால் போட்டு உட்காந்து கொண்டாய். நீ என்னதான் “புகாமா” என உன் பெயரை வைத்திருந்தாலும் என் மனதுக்குள் புகுந்துவிட்டாய் புவிஅரசனே.

இது உங்களுக்கு நான் எழுதும் முதல் காதல் கடிதம் ஆனால் எனக்கு எழுபத்திஏழாவது கடிதம் இது.மீதம் எழுபத்தி ஆறு கடிதங்கள் யாருக்கு எழுதினாய் என கேட்டுகும் அளவிற்கு நீ குறுகிய புத்தி கொண்டவன் இல்லை என்பது எனக்கு தெரியும் என் சொக்க தங்கமே.
இதற்கு முன்பு இங்கிருக்கும் சில அல்ர சில்ர நடிகர்களான குஷால், வெம்பு ஆகியவர்கள் என்னை கரெக்ட் பண்ண என்னென்னவோ சர்கஸ்செல்லாம் செய்து பார்த்தார்கள்,பார்டிக்கு அழைத்து போய் ஃபுல் போதை வாங்கித்தந்தான் வெம்பு, எதற்க்கு வம்பு என போதை தெளிந்ததும் கலற்றிவிட்டேன், குஷால் லேசுப்பட்டவனா லேப்-டாப்பெல்லாம் வாங்கித் தந்தான் எனக்குத்தான் அந்த குதிரை மூஞ்சியானை பிடிக்கவில்லை எப்படி பிடிக்கும் உங்கள் அழகு முகம் முத்திரையாய் எனது இதயத்தில் இருக்கும் போது என் கருப்பு தங்கமே.

“கருப்புதான் எனக்கு பிடிச்ச கலரு..உன் கண்ணு ரெண்டும்’ பாடல் கேட்கும் போதெல்லாம் நான் உன்னை நினைத்து வெட்கத்தில் முகம் சிவந்து போவேன். உனக்கு சிவந்தாலும் வெளியே தெரியாது என் கள்ளா..வருத்தப்படாதே எங்கள் நாட்டில் “ஃபேர் அண்டு லவ்லி” என்றோரு சிகப்பழகு கிரீம் இருக்கிறது..திருமணத்திற்கு பின் அந்த கிரீமை தேய்த்து தேய்த்தே உங்களையும் என்னை போன்று சிகப்பாக்கிவிடுறேன்.

உங்கள் மனதில் நான் இருக்கிறேனா இல்லையா என்ற குழப்பத்தில்தான் இதுவரை நான் கடிதம் எழுதாமல் இருந்தேன்,ஆனால் எங்கள் கலாச்சார தூதுவர் சொன்ன விசயம் என்னை காதலில் பறக்க வைத்துவிட்டது.

என் குளியலறை காட்சி கொண்ட சி.டி யை பார்த்துவிட்டு நீங்கள் கிறுகிறுத்து போய் “ஷி இஸ் ஹாட்..’ என பெருமூச்சுடன் சொன்னதாக தூதுவர் என்னிடம் கூறியதும் நான் நானி,வெட்கி காதலில் கசிந்துருகிவிட்டேன்.அப்போதே முடிவு செய்துவிடேன் அல்ர சில்ர பசங்கெல்லாம் இனி வேணாம்,புகாமாதான் எல்லாம் என.

இருந்தாலும் உங்கள் மீது எனக்கு செல்லமான கோபம் , நான் கெழுங்கு மொழியில் நடித்த “குடிச்சுபுட்டு குத்துவிடேன்னா..” படம் ஒரு வருடம் ஓடியது நீங்கள் அதை பார்க்காமல்,குளியலறை சி.டியை பார்த்தது வருத்தம்தான் ஏனென்றால் அந்த படத்தில் சி.டியில் இருப்பதைவிட கவர்சியாக இருப்பேன் ,படம் முழுக்க குளித்து கொண்டும் இருப்பேன்.என்னிடம் கேட்டிருக்கலாமே அன்பே.

நீங்கள் அடுத்த முறை என்னை பார்க்க வேண்டும் என்றால் என்னிடம் கூறுங்கள், நான் பேரிக்கா நாட்டிற்கு ஷூட்டிங் வரும்போது நேரிலேயே வந்துவிடுகிறேன்..ஹி..ஹி.. இது வெட்க சிரிப்பு.

இங்கிருக்கு பிசின் நடிகையெல்லாம் மந்தி மொழியில் நடிப்பதற்கே பீத்திக்கொள்கிறார்கள்,பாவம் அவர்களுக்கு தெரியாது நீங்கள் மனது வைத்தால் நான் உலகில் உள்ள அனைத்து மொழிகளிலும் பல அவார்டுகளை வாங்க முடியுமென்று.
உங்கள் இதயத்தையும் சேர்த்து எனக்கு இரண்டு இதயம் என்பதை சொல்லாமல் சொல்லத்தான் இதயத்திற்கு நேரே என் நெஞ்சில் பச்சை குத்தியிருக்கிறேன் என் காதலா. நீங்கள் கவனித்திருப்பீர்கள் நிச்சயமாக.

விரைவில் பதிலை எதிர்பார்க்கிறேன் என் புஞ்சிகுட்டி,அஜ்ஜுகுட்டி என் ப்ளாக் ஃபாரஸ்ட் கேக்கே. இக்கடிதத்தோடு என் ரவாலட்டு முத்தங்களையும் அனுப்புகிறேன் ரகசியமாக அனுபவிக்கவும் என் ரகசிய சினேகிதா.

அப்புறம் நமது காதலைப் பற்றி யார் கேட்டாலும், எங்களுக்கு இடையில் இருப்பது வெறும் நட்புதான் பதிலலிக்கவும்.ஏனென்றால் நமது பொதுவாழ்க்கையில் இது சிக்கலை உருவாக்கும்.காலம் வரும்போது உலகிற்கு சொல்வோம்.அதுவரை ரகசிய காதலனுக்கு ரகசிய காதலியின் ரகசிய முத்தங்கள்.

இப்படிக்கு
இதுவரை உலகிற்கே கனவு கன்னி, இன்று முதல் உங்களுக்கு மட்டும் கனவுகன்னி
“டிரீம் கேள், கிளாமரஸ் பியூட்டி”
ஷிரிஷா

எழுதிவிட்டு அக்கடித்தை ஜெராக்ஸ் எடுக்க சொல்லி வேலைக்காரியிடம் சொன்னாள். “எதிர்காலத்தில் பல கோடிகளுக்கு ஏலம் போகப்போகும் காதல் கடிதம்டீ காப்பி எடுத்து பத்திரமா வை” என்று கூறிவிட்டு.,கடிதத்தை நாக்கினால் ஈரப்படுத்தி ஒட்டினால், “இவனமட்டும் எப்படியாவது மடக்கிப்போட்டோம்னா இவன் பேர சொல்லியே இங்க ஒரு கட்சி ஆரம்பிச்சு எல்லாப்பயலயும் ஆட்டிபடச்சிடலாம்”என மனதிற்குள் நினைத்தவாறு.,முகவரி எழுத ஆரம்பித்தாள், உங்கள் எங்கள் உலகின் மன்னிக்கவும் “புகாமா”வின் கனவு கன்னி..(?).

Saturday, October 24, 2009

தம்பியின் துப்பாக்கிக்கு வெள்ளைப்புறாவாக ஆசை



பறவைகளின் சத்தம் தம்பிக்கு பரவசத்தை கொடுத்தது.,
ஆனால் நம்பவும் முடியவில்லை
மனிதர்களுக்கே இடம் இல்லாத பூமியில் இன்னும் எப்படி பறவைகள் உயிர் வாழ்கின்றன
புரியவில்லை புரிந்து கொள்ளவும் விருப்பமில்லை தம்பிக்கு.

ஒருவேலை கனவாக இருக்குமோ.., இருந்தால் இருக்கட்டும் இனிமையாகத் தானே இருக்கிறது
கண்விழிக்க விருப்பமில்லாமல் இமைகளுக்குள் விழித்தவாறு படுத்திருந்தான் தம்பி.

அந்தவாய்க்கால் பகுதியில் இது போன்று ஒரு அமைதியை பார்த்ததில்லை அவன்
வெடிகுண்டுகளும்,சிதறும் எரி குண்டுகளும்,துளைக்கும் தோட்டாக்களுமே
அவனுக்கு அப்பகுதியில் பழக்கபட்ட சத்தங்கள்
பறவைகளின் சத்தம் ஒரு கோடி வெள்ளைப் புறாக்களை சிறகடிக்க வைத்தன
மிருதுவான புன்முறுவல் செய்தவனை, “க்ளக்..” என துப்பாக்கியின் விசையை மிக அருகில் இழுக்கும் சத்தம் கோபமுற செய்து விழி திறந்தது.

விழித்தவன் திடுக்கிட்டான்
அவன் முன்னே ஒரு கைத்துப்பாக்கி அவனை குறி பார்த்து கொண்டிருந்தது
சுதாரித்தவன் தன் துப்பாக்கி உறையில் கைவிட்டு அதிர்ச்சி அடைந்தான்
துப்பாக்கி இல்லை
குறி பார்த்து கொண்டிருந்த துப்பாக்கியை கூர்ந்து பார்த்தான்
ஆம் அது இவனுடையதுதான்

ஒரு கனவிலிருந்து எழுந்து மீண்டும் ஒரு பயங்கர கனவில் சிக்கியதை போல் உணர்ந்தான்
குறிவைத்து கொண்டிருந்த துப்பாக்கி பேசியது
“மன்னித்துக்கொள் .. எனக்கு விடுதலை வேண்டும்
கடந்த முப்பது ஆண்டுகளாய் உன்னுடன் இருக்கிறேன்
எனக்கு மிகவும் சோர்வாய் இருக்கிறது, ஓய்வு தேவை
நீ ஓய்வெடுப்பது போல் எனக்கு தெரியவில்லை
அதனால் நானே முடிவுக்கு வந்துவிட்டேன்”

தம்பி கொஞ்சமும் தடுமாறாமல் துப்பாக்கியை நேருக்கு நேர் பார்த்து சொன்னான் மக்களின் விடுதலைதான் நம் எல்லோருக்கும் விடுதலை பின்புதான் ஓய்வு,அது என் துப்பாக்கியான உனக்கு நன்றாக தெரியும், உன்னைப் பற்றி எனக்கும் நன்றாக தெரியும்,இது நீ பேசவில்லை உன்னை எனக்கு எதிராக திருப்பிவிட்டு ,பின் நின்று யாரோ பேசுகிறார்கள் பித்தலாட்டகாரர்கள் ,

யாரது மறைந்திருப்பது.தைரியம் இருந்தால் நேரில் நில்

கர்ஜித்தான் தம்பி

மறைந்திருந்த உருவம் உருபெற்று துப்பாக்கியை தம்பியை நோக்கி நீட்டியவாறு தோன்றியது, நாகத்தலையுடன் ஓநாய் பற்களை கொண்டிருந்தது அந்த பயங்கர உருவம்,
அதன் உடம்பில் உலக வரைபடம் தெரிந்தது,முக்கியமான சில நாடுகள் முக்கிய உறுப்புகளாக தெளிவாய் தெரிந்தன.

தம்பி கேட்டான் உறுமலோடு “ யார் நீ.. என் துப்பாக்கியை எனக்கு எதிராக நீட்டுகிறாய்..”
உருவம் சொன்னது “ஆண்டவன்”
தம்பி திருத்தினான் “ஆளுபவன் என்று கூறுங்கள்.., மறைந்திருந்து தாக்கும் உங்கள் தந்திரம் காட்டி கொடுத்துவிட்டது”

உருவம் துப்பாக்கியின் விசையை தம்பியை நோக்கி இழுக்க தயாரானது

தம்பி உருவத்தை உற்று நோக்கினான் புன்முறுவலோடு

உருவம் கோபமாய் கேட்டது “ஏன் சிரிக்கிறாய் என்னை பார்த்து..”

தம்பி சொன்னான் “உங்கள் உடம்பிலேயே ஏகப்பட்ட எல்லை பிரச்சினை இருப்பதாக தெரிகிறதே..”

“கிண்டலா..என்ன சொல்ல வருகிறாய் முதலில் அவற்றை கவனிக்க வேண்டும் என்கிறாயா.. சாகப்போகிறவனே “ உருவம் வார்த்தைகளை கக்கியது.

“இல்லை எங்களை சரியாக கவனியுங்கள் என்கிறேன், எங்களுடையது இடப்பிரச்சினை , எல்லைப் பிரச்சினை அல்ல,இருப்பிடம் இருந்தால் தானே எல்லைகளை வகுப்பதிற்கு.. இருக்கவே இடமில்லை எம்மக்களுக்கு”

உருவம் அவசரப்பட்டது “அதெல்லாம் எனக்கு தெரியாது.. சாவதிற்கு முன் சொல்,உன் கடைசி விருப்பம் என்ன”

உலகமே மீண்டும் புரிந்துகொள் எனக்கு எப்போது ஒரே விருப்பம்தான்.. மக்கள் விடுதலை., எம்மக்களுக்கு மக்கள் என்ற அங்கீகாரம் வேறொன்றும் இல்லை எப்போதும்”
என்னை கொல்வதற்க்கு முன் நீ என்னிடம் என்ன கேட்க வேண்டுமோ கேள் உலகமே, தம்பி உலகத்திற்கு வாய்பளித்தான்.

இந்த உலகத்திற்குதான் கேள்வி கேட்பது ஒரு போழுது போக்கு ஆயிற்றே துப்பாக்கியை கீழே இறக்காமல் எச்சரிக்கையோடு கேட்க ஆரம்பித்தது

“ உன் மீது நிறைய குற்றச்சாட்டு இருக்கிறதே..முக்கியமாக நீ ஒரு பயங்கரவாத இயக்கத்தின் தலைவன், பேச்சுவார்த்தைகளில் நம்பிக்கையற்று ஆயுதத்தால் பேசுபவன் என்று”

தம்பி நிதானமாய் சொன்னான் “ எங்களுக்கு பேச்சு வார்தையில் நம்பிக்கை இருக்கிறது,பேசும் நபர்களிடம்தான் இல்லை.,எங்கள் குரலுக்கு மதிப்பற்று,எங்கள் கதறல்கள் அதிகாரவர்க்கதின் காதுகளில் கேட்காமல் போனதால்தான் சத்தமாக எங்கள் மொழியை மாற்றினோம் துப்பாக்கி மொழியாக , இப்போது கேட்கிறதே எல்லோருக்கும் ”

கொடிய உருவங்கொண்ட உலகம் கேட்டது , “சாதிய ஏற்ற தாழ்வு வேறு உண்டாமே உங்கள் இயக்கத்தில்..”
சீறினான் தம்பி “ நான் ஒரு ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்டு கொண்டிருக்கிற இனத்தின் போராளி என்னை கேவலமான ஜாதி தலைவன் ஆக்காதீர்கள்,”

தப்பியின் சீற்றம் கண்டு உருவத்தின் நிழல் நடுங்கியது “சிறுவர்களை ஆயுதம் ஏந்த செய்கிறாயாமே..”
காடு அதிர சிரித்தான் தம்பி , சிரிப்பில் கோபம் கொப்பளித்தது “ என் அத்தையை அரை நிர்வாணப்படுத்தி அலறவிட்டார்கள்,அப்போது எனக்கு பத்து வயது, அத்தையை காக்க கையில் கிடைத்ததை ஆயுதமாக்கினேன்.., இப்போது என் அடுத்த சந்ததியினர் கையில் ஆயுதம் தருகிறேன் அவர்கள் வீட்டு பெண்களை காத்திட. இங்கு எந்த குழந்தையும் குழந்தையாய் வளர முடியாது,படிப்பதற்கு போனால் பதுங்கு குழியை பார்த்து வைத்துவிட்டுதான் போக வேண்டும்.அது போல் ஒரு எச்சரிக்கை உணர்வுடன் இருக்கும் பாதுகாப்புதான் இது,என் அம்மாவை காப்பாற்ற நான் எந்த வயதில் ஆயுதம் ஏந்தினால் என்ன”

உலகம் காத்திருக்காமல் அடுத்த கேள்வியை முன் வைத்தது, எப்படியாவது இவனை மடக்கிவிடவேண்டும் என்ற எண்ணத்தில்
“ நீங்கள் போரிடுவதால்.., நிறைய அப்பாவி மக்கள் பலியாகின்றனறே..அது மாபெரும் குற்றமில்லையா..”
“உங்கள் கேள்வியே தவறு..ஒருவர் மட்டும் சண்டையிட முடியாது , இரண்டு நபர் மோதல்தான் சண்டை ஆகும். ஆம் அப்பாவி மக்கள் இறக்கின்றனர்.. எரிமலையின் பிளம்புக்குள் சில மின்மினி பூச்சிகள் பொசுங்கிதான் போகும், தியாகத்திற்கு அவர்களை வணங்குகிறேன், அவர்கள் கடவுளுக்கு நிகரானவர்கள்”

“பல அரசியல் தலைவர்களை கொன்று என்னையே உளுக்கி இருக்கிறீர்களே., இது குற்றமில்லை என உன்னால் கூற முடியாது” கொக்கறித்தது உலகம்.

தம்பியின் உதடுகள் வார்தைகளை தெளிவாய் உச்சரித்தன
“ இந்த கேள்விக்கு பதில் முதல் பதிலிலேயே இருக்கிறது,மறுபடியும் விளக்குகிறேன்,அதிகாரத்தில் இருப்பவரிடம் முறையிட்டோம் பலமுறை ,உங்கள் ராணுவமும் எங்களை சிதைக்கிறதென்றும்,அதனை திருப்ப பெற்று எங்களை காப்பாற்றுங்கள் என்றும்,செவி சாய்கவில்லை அவர், மூன்று முறை கடிதம் எழுதினோம்,மூவாயிரம் பேரை இழக்கும் வரை பதில் இல்லை.ஆகவே எங்கள் மொழியை மாற்றினோம், நாங்கள் அரசியல் தலைவரை கொல்லவில்லை ,எங்கள் கோரிக்கையை சத்தமாக அதிகார வர்க்கத்திடம் கூறினோம், மூவாயிரம் உயிரின் வலி ஒரு உயிரின் வாயிலாக தெரியப்படுத்தினோம்”

நேரமாகிவிட்டது உலகத்திற்கு.. ‘ நீ என்ன சொன்னாலும்.. தவறு உன்னுடையதுதான்..”

தம்பி மௌனமாக சிரித்தான்..

உலகம் துப்பாக்கியை தம்பியின் நெற்றியை நோக்கி நீட்டியவாறு சொன்னது
“உன் தவறு என்ன தெரியுமா.. உலகமே தவறாக இருக்கும் போது நீ சரியாக இருப்பது மாபெரும் தவறு”

ஓநாய் பற்கள் ரத்த வெறியுடன் வெளியே தெரிய.. அகங்காரமாய் சிரித்தது நாகத்தலை உலகம்.

துப்பாக்கியின் விசையை இழுக்க முற்பட

தம்பி சாந்தமான புன்னகையுடன் ஒரு குழந்தையை அழைப்பது போல் துப்பாக்கியை நோக்கி இரு கரங்களையும் நீட்டினான்
துப்பாக்கி வெள்ளை புறாவென பறந்து தம்பியின் கைகளுக்கு வந்தது..

உலகத்தின் கோர முகம் மேலும் கோரம் ஆயிற்று., உலக உருவத்தின் ரோம புள்ளி ஓட்டைகளின் வழியே ஒரு கோடி நச்சு பாம்புகள் ஓநாய் பற்களுடன் படமெடுத்து பிளிரின தம்பியை நோக்கி.
தம்பி துப்பாக்கியை தீர்க்கமாக முத்தமிட்டு அதனிடம் கூறினான்.. நம் மக்கள் விடுதலை பெற்றுவிட்டால், நீ வெள்ளை புறாவாய் என்னிடம் இருப்பாய்., அதுவரை மன்னித்துக்கொள்..

நஞ்சுகளிடையே துப்பாக்கியுடன் பாய்ந்தான் தம்பி..

துப்பாக்கி, டாங்கி, எறி குண்டு, விஷக் குண்டுகள்,ஏவுகணை என எந்த ஆயுத்தாலும் கொல்ல முடியாத தம்பியை
மறுநாள் இந்த உலகம், செய்தி ஊடகம் என்னும் புதிய ஆயுதம் கொண்டு தம்பியைக் கொன்றது.

Friday, October 23, 2009

சர்வ வல்லமை பெறுவதற்கு முன் , காதலியின் பின்னால் அலைந்துகொண்டேயிருந்தான் ஒருவன்…



“ஸ்டெப்பானி ஐசக்” அந்த அழகின் அழகிற்கு மறுபெயர்
பதினாறே வயது நிறம்பிய, மனதில் ரெக்கை கட்டிய யூத தேவதை அவள்
அவனுக்கும் அதே வயது
ஓவியனாகும் கனவில் இருந்தவனுக்கு
உயிருள்ள ஓவியமாய் தெரிந்தாள் அவள்.,

தூரிகையின் லாபகம் அவனுக்கு
அந்த காரிகையிடம் கை கூடவில்லை
பூந்தோட்டத்தில் அவள்
தூர நின்று ரசிக்கும் அவனை
ஒரு சிறுவனை போல் அருகில் அழைத்தாள்.,

யூதர்களுக்கே ஆன ஆரிய மனோபாவம்
அவள் பார்வையில் இவனுக்கு தென்பட்டு
மறுகனமே படபடக்கும் இதயத்தால் மறைந்தது
அப்போதே அவன் சுதாரித்திருக்கலாம்
காதல் அவனை கபடமாக யோசிக்க விடவில்லை.,

“என்ன” என்பது போல் இரு புருவங்களையும் மேலே உயர்த்தி
வினாவினாள்
வார்த்தைகளற்று அவள் அழகில் ஆழ்ந்தான்
அவள் அலட்சிய புன்னகையோடு புறப்பட்டுச் சென்றாள்.,
அவளின் வாசம் பூக்களிடம் நிறம்பி இருந்தது


தன் நண்பனிடம் கூறினான் “அவள் ஒரு வாசமிக்க பேரழகி
அவள் வாசம் என் நாசியின் வழியே புகுந்து மூளையை ஸ்தம்பிக்க செய்துவிட்டது, வார்த்தைகளை கைது செய்து சென்று விட்டாள்
நான் அவளிடம் பேசவில்லை,
இல்லை இல்லை அவளுக்கு என் மனதின் குரல் கேட்கவில்லை.

அவளுடன் நான் வாழ ஆசைப்படுகிறேன்
எங்கோ எங்களுக்கான சிறிய பூமியில்
எங்களுக்கான காற்றுடன்,சூரிய ஒளியுடன், நிலவு ஒளியுடன் வாழ விரும்புகிறேன்.
நான் ஒரு ஓவிய ஆசிரியனாகவும் அவள் என் குழந்தைகளுக்கு தாயாகவும்
வண்ணங்களான வாழ்கையாக இருக்கிறது நினைத்து பார்கவே
பெருமையுடன் கூறினான் நண்பனிடம்

அவளிடம் கூற
நகைத்தாள் நங்கை
நான்கடி இருப்பாயா.. குள்ளா..
தன் உயரத்தை முதல் முறையாக கவனித்தான்
பூனை பூட்ஸ் போட்டு கொண்டு வந்திருக்கிறது
ஹா..ஹா..ஹா... யூத தோழிகள் சிரிப்பை தெரு முழுதும் சிதறினர்
அவனது கண்கள் கால்களை நோக்கி தலையை பணித்தன
பாதங்கள் எதிர் காந்தவிசையை பின் பற்றி வெவ்வேறு திசைகளை நோக்கி இருந்தன
காலணியின் அழுக்கில் இரண்டு சொட்டு நீர் பதிந்தது
நெஞ்சில் அழுக்கு அப்பியது

ஏளனமாய் சொன்னாள் “என்னை மணப்பவன் கட்டிப்பாக
கம்பீரமான ராணுவ வீரனாகதான் இருப்பான்”
கையிலிருந்த வண்ணம் காய்ந்த தூரிகை விரல்களை விட்டு விலகியது.,
கோபம் கொஞ்சம் உள்ளத்தில் வன்ம வண்ணம் பூசியது.

தூரப் போ.. பூனையே.. ஹா..ஹா... தோழிகளுடன் அவளது சிரிப்பும்
கலந்து அவனின் இதயத்தை கசக்கியது.,

ஒரு முறை என் பெயர் சொல்லி அன்புடன் அழைப்பாயா
அவன் கண்ணீரால் அவள் கால்களை நனைத்தான்
சாக்கடையை கடப்பது போல் கடந்து சென்றாள்.,

அவமானம் அவனை ராணுவத்தில் சேர்த்தது
ராணுவம் வீரனாக்கும் என்ற அறியாமையில்
முதலாம் உலகப்போரில்
பல குண்டுகளையும் தோட்டாக்களையும் கடந்து
டாங்கிலிடயே ஊர்ந்து தப்பி
மீண்டும் அவளை சந்தித்தான்.

நான் இப்போது ராணுவ வீரன் உன் விருப்பபடியே,
இப்போதெல்லாம் பூனைகளை போருக்கு அழைத்து போகிறார்களா ஜெர்மனியில்
ஹா..ஹா.. ஒரு ஆண் அவளருகில் சிரித்து இவன் மீது பற்களை பதித்தான்.

இவன்தான் நான் விரும்பிய கம்பீரமான ராணுவ வீரன்,வெற்றிப் படையின் வீரன்
உன்னை போன்று மடிய பயந்து மண்டியிட்ட ஜெர்மனி படை வீரன் அல்ல
ஆஸ்திரியப் படை வீரன்,
அவளது வார்த்தைகளில் கர்வம் எச்சிலாய் இவன் முகத்தில் தெரிக்கிறது
“முக்கியமாக அனைத்திலும் ஜெயிக்கும் ஆரியன்.. யூதன்”.

உடலுக்குள் பூதம் புக ஆரம்பித்தது
பரவாயில்லை என்னை காதலிக்க வேண்டாம்
ஒருமுறை என் பெயரைச் சொல்லி அதை புணிதப்படுத்து தேவதையே
காதல் அவனை மேலும் கோழையாக்கியது

அவள் அவளது வீரனுடன் சேர்ந்து இவனை மீண்டும் பூனையாக்கி
விரட்டினாள்

காலச் சக்கரம் உருண்டது, தலைக்குள் பல் சக்கரம் சுழன்றது
பூமி சுற்றி அவன் காலடியில் வந்தது
பூதம் அவனுள் பேசுவதை நிறுத்தவில்லை
“வெற்றிப் படையை சேர்ந்தவன் எனது ஆண்., ஆம் ஆஸ்ட்ரிய படையை சேர்ந்தவன்”
அவளின் குரல் பூதத்தின் குரலாய் ஒலித்தது,
கட்டளையிட்டான் ஆஸ்திரியாவை மண்டியிட வைத்து அழியுங்கள்
அவனது குரல் எதிர் நாட்டை குதறிப் போட்டது
பூமிக்குள் இருந்த புளுக்கள் கூட பொசுங்கின.

முதல் வேலையாக, அவள் கணவனின் ரத்தம் தோய்ந்த பற்கள்
இவன் மேஜை மீது அடுக்கப்பட்டது,அலங்கார பொருளாய்,
வெற்றியின் அடையாள பொருளாய் ஆனது,
மூளையில் பல் சக்கரம் இன்னும் மூர்க்கமாய் சுற்ற..,
இப்போது இவன் அதை பார்த்து நர.., நரவென.., நகைத்தான்.

ஆஸ்ட்ரிய போரின் கோரமான வெற்றி
இவனுக்கு காதலில் முதல் வெற்றி
மீண்டும் அவளது குரல் சாத்தானின் குரலாய் கேட்டது
“என்னுடயவன் முக்கியமாக அனைத்திலும் ஜெயிக்கும் ஆரியன்.. யூதன்”

முடிக்கத் தொடங்கினான் யூதர்களை
படைவீரர்களிடம் இருந்து பதில் வந்தது
ஈசல் போல் கணக்கில்லாமல் இருக்கிறார்கள் யூதர்கள்
இவன் சொன்னான் செருக்குடன் “அப்போ ஈசல் போல் ஒரே நாளில் அவர்கள் ஆயுள் முடியட்டும்” என்று

பூக்களில் பரவியிருந்த அவளின் வாசம் இப்போது இவனுக்கு யூதர்களின் பிணங்களின் மீது வீசியது
நிறைய பிணங்களை படைத்தான்
படைத்து குவித்தான்.

அந்த பேரழகி முன் தன் வீரத்தை நிரூபிக்கும் பெருமையுடன்
அவளைத் தேடினான் ஒரே ஒரு வார்த்தைக்காக..,
பூமிக்கு அடியில் மறைந்திருந்தாலும்.., பிளந்து ,புகுந்து அழைத்து வாருங்கள் அந்த யூத தேவதையை.

அந்த தேவதை இப்போது ஒளியிழந்து, சிறகிழந்து சிதைந்த நினைவுடன்
பிதற்றினாள் “அன்புடன் அவன் பெயரை ஒருமுறை சொல்லி இருக்கலாமோ”

அடிமை முகாம்களில் அவளது பெயர் அழைக்கப்பட்டது
“ஸ்டெப்பானி” “ஸ்டெப்பானி”
அழுக்கு மூட்டைகளுடன் அடைபட்டு கிடந்தவள் பஞ்சடைத்த கண்களை திடுக்கிட்டு திறந்தாள்,
அவளது உதடுகள் தன்னிச்சையாக முதன் முறையாக அவன் பெயரை சொன்னது
நடுக்கத்துடன்,பயத்துடன்,பதற்றத்துடன் “ஹி..ஹிட்லர்”.


பின் குறிப்பு:

அவன் உலக யுத்தத்தை நடத்தி வீரன் ஆனான்
காதலில் ஜெயித்து அழகன் ஆனான்

அவள் கணவனை பறிகொடுத்து பைத்தியமானாள்
இரண்டாம் உலகப் போரில் ஏற்பட்ட அழிவுகளுக்கு காரணமானாள்.

Thursday, October 22, 2009

கடவுளின் கடைசி நிமிடங்கள்..




சவுக்கின் நுனியில் மின்னல் தெரித்து..,
தோலினை கிழித்து மின்சாரம் பாய்ச்சுகிறது,
சர்ப்பத்தின் பிளந்த நாக்கு கொண்ட சவுக்கு, தழும்புகளை செந்நிற ஆடையாக்குகிறது
சிலுவையின் கொடிய பாரம் முதுகெலும்பை முறித்து
ஊனமாக்குகிறது.. மலை ஏற வேண்டுமாம்..
பின்பு சிலுவையில் ஏற..,

என்ன காரணம்
நாவினை இழுத்து தரையினில் வீழ்த்துகிறது தாகம்..,
மனித குலத்தின் எதிரியாக என்னை எது ஆக்கியது.,
நாவரண்டுவிட்டது..கண்கள் இருட்டுகின்றது..
“சுளீர்” மீண்டும் உடலில் மின்னல் மின்சாரத்தைப் பாய்சுகிறது
சாட்டையின் வீச்சு..,
துடித்து நிமிர்கிறது ஆன்மா,

யாராவது தண்ணீர் கொடுங்கள் .. தாகம் தீருங்கள்..
கூடியிருக்கும் கோடி கண்கள் பார்வையை குவித்து பார்க்கிறார்கள்
என்ன எல்லோரும் அப்படி பார்க்கிறீர்கள்
தேவதூதனே மானிடரிடம் தண்ணீர் கேட்கிறான் என்றா..
யாராவது உதவுங்கள் ஏன் கேட்கிறேன் என
எனக்கு பிரசங்கம் பண்ண தெம்பில்லை..,


ஆ.. இதோ ஒருவன் தண்ணீர் குவலையுடன் நெருங்குகிறான்
இல்லை என் தாகம் தாங்காத நாக்குதான் குவலையை நோக்கி
போகிறது, எப்படி இருந்தால் என்ன தண்ணீர் வேண்டும்,
காவலாளியின் கம்பு குவலையை குடிக்கிறது,

தண்ணீர் தர முயர்சித்தவனை ஏக்கத்தோடு பார்க்கிறது குற்றுயிர்,
ஆ... “பென்கர்” நீயா அது – என் நிழலால் உயிர் பெற்றவனே,
உன் உயிர் தந்தாவது
என் தாகம் தீர்த்திருக்க வேண்டாமா நீ.. நயவஞ்சகா.

“அய்யோ..” உயிர் பயத்தில் உருகுலைகிறதே உள்ளம்..,
நான் யாரையும் சபிக்காத அமைதியான ஏசய்யா ஆயிற்றே
ஏன் இப்படி எல்லோரையும் பழிக்கிறேன்..

முட்புதருக்குள் சிக்கிய மூளை முரண்பட்டு யோசித்தது
“பளீர்” யார் இந்த காவலாளி இவ்வளவு மூர்க்கமாக சாட்டையை சுழற்றுகின்றானே
ஒருவேளை நான் “அப்பா” என்று அழைத்திடாத “ஜோசப்”பாக இருக்குமோ
அடி தாங்காமல் அடிவயிற்றிலிருந்து கதறுகிறேன் “அப்பா”
இப்போது அழைத்தது தேவனை அல்ல..,
உதிரக்கோடு போடுகிறது காவலாளியின் சவுக்கு,


என் சீடன் யூதாஸா காட்டிக் கொடுத்தான்., நம்ப மறுக்கிறதே மனம்
உன்மையாய் இருந்தால் புளுத்துதான் சாவான்.,
யூதாஸ் என்னிடம் கேட்டிருந்தால்
எட்டுக்கு பத்து மடங்கு வெள்ளிகளை தந்திருப்பேனே
முட்டாள் ஒருவேளை மகதலீனாவிற்கு தரவேண்டிய முத்தத்தை
எனக்கு தவறுதலாக தந்துவிட்டானா..,

கால்கள் தேய்ந்து,பாதம் பரப்பி, முட்டியிட்டு மலையின் உச்சிக்கு
இழுத்து வந்தது தேகம் கிழித்து குருதிச் சட்டை அணிவித்த சாட்டை
சிலுவையில் கிடத்தி கைகளை இருபுறம் விரிக்கின்றனர்,
கால்களை பின்னி ஒன்றின் மேல் ஒன்றாய் வைத்து..,
ரத்தம் தெறிக்க பாதங்களை கட்டையுடன் இணைக்கிறது ஆணி
என்ன மக்கள் இவர்கள் கூட்டமாய்
பிரசங்கம் கேட்க..,
மற்றொரு ஆணி வலது உள்ளங்கையில் உளியாய்..,
பிதற்றலை கேட்க..,
மற்றொரு ஆணி இடது உள்ளங்கை ஆயுள் ரேகையை அழிக்கிறது
அற்புதங்களை பார்க்க..,
அதிசயங்களை பார்க்க..,
கொடுமையை பார்க்க..,
கொலையைப் பார்க்க..,
மக்கள் அனைத்திற்க்கும் கூடுகிறார்களே..
புரிந்துவிட்டது பிதாவே.. இவர்களுக்கு பொழுது போக்க வேண்டும்,
வேடிக்கை பார்க்க வேண்டும்,
சோம்பேறிகளாய் இருப்பார்கள்,அதிசயம் அற்புதம் மூலம்
அவர்களை குதூகலப் படுத்த வேண்டும்.,

ஞானத்தின் வாசல் திறக்க கிறிஸ்து ஒளிக்கீற்றோடு கரைகிறார்.

மீண்டும் உயிர்பெற்று அற்புதம் நிகழ்த்தி குதூகல படுத்துவார் என
மக்கள் கிசு கிசுப்பாய் பேசிக்கொண்டனர்.